×

ஆர்.எஸ்.மங்கலம் பகுதியில் கரிமூட்ட தொழிலுக்கு மாறிய விவசாயிகள்

ஆர்.எஸ்.மங்கலம், மார்ச் 7: ஆர்.எஸ்.மங்கலம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த சில வருடங்களாக மழை இல்லாமல் போனதால் மாற்று தொழிலாக கரிமூட்ட தொழிலில் அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர். ராமநாதபுரம் மாவட்டத்தின் முக்கிய பகுதியான ஒருங்கிணைந்த திருவாடானை தாலுகா பகுதியில் கடந்த நான்கு ஆண்டுகளாக சரியான மழை பெய்யாததால் நெல் விவசாயம் முற்றிலும் பாதிக்கப்பட்டது. இதனால் ஆர்.எஸ்.மங்கலம் சுற்றுவட்டாரப் பகுதிகளான ஆவரேந்தல், பாரனூர், சித்தூர்வாடி, சோழந்தூர், வடவயல், மங்கலம், களக்குடி, செட்டிய மடை, பிச்சனாகோட்டை, ரெகுநாதன்மடை, செங்குடி, பூலாங்குடி, புலி வீரதேவன் கோட்டை, குயவனேந்தல், பணிதிவயல்’ அரியான்கோட்டை போன்ற மற்றும் அதன் சுற்றுபுறத்தில் உள்ள சில கிராமங்களில் மிளகாய், எள், போன்ற விவசாயங்களும் மழை இல்லாததால் விவசாயிகளுக்கு எதிர்பார்த்தபடியான மகசூழ் கிடைக்கவில்லை.

இதனால் இப்பகுதியில் மக்களுக்கான வேலைவாய்ப்பை தரக்கூடிய எந்தவிதமான தொழிற்சாலைகளோ நிறுவனங்களே இல்லை. இதனால் பிழைப்புக்கு வேறு வழி இல்லாத விவசாயப் பொதுமக்கள் கிராமங்களில் ஏராளமாக உள்ள கருவேல மரங்களை பயன்படுத்தி கரிமூட்டம் போடும் தொழிலில் மும்முரமாக ஈடுபடத் தொடங்கினர். இந்த கருவேல மரங்கள் ஒழிக்கப்பட வேண்டிய ஒன்றுதான். இதனால் நிலத்தடி நீர் உருஞ்சப்படுவதும் உண்மைதான். இருந்த போதும் இன்றைய நிலையில் காட்டுக்கருவேல மரங்களே இப்பகுதியில் உள்ள மக்களின் வாழ்வாதாரமாக உள்ளது. இதுகுறித்து விவசாயிகள் கூறுகையில், ‘எங்கள் பகுதியில் சரியான மழை பெய்யாததால் கடந்த 4 வருடமாகவே விவசாயம் இல்லாமல் எங்களது குடும்பங்கள் மிகவும் கஷ்டப்படுகின்றன.

ஏற்கனவே கடந்த 3 வருடமாகவே மழை இல்லாமல் போனதால் பல வகையில் கடனாளியாகி விட்டோம், இந்த வருடமாவது நல்ல மழை பெய்யும் கஷ்டம் தீர்ந்துவிடும் என்று நினைத்தோம். இந்த வருடமும் மழை இல்லாததால் மிகவும் துன்பப்படும் நிலை உருவாகவிட்டது. எங்கள் ஊர் பகுதிகளில் ஏதேனும்  தொழிற்சாலைகள் இருந்தாலாவது ஏதேனும் வேலை வாய்ப்பு கிடைக்கும். அதற்கும் இங்கே வழி இல்லை. இதனால் இப்பகுதி மக்கள் வேறு வழியில்லாமல் கரிமூட்டத் தொழிலில் இறங்கிவிட்டோம். இந்த கருவேல மரங்களை மிகவும் நிதானமாக வெட்ட வேண்டும். இல்லை என்றால் கை, கால்களை பதம் பார்த்து விடுகின்றது. எப்படி இருந்தாலும் குடும்பத்தை காப்பாற்ற வேண்டுமே என்ற நோக்கில் சொந்தமாகவும், கூலிக்காகவும் வேறு வழியில்லாமல் கரிமூட்ட தொழிலில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறோம்’ என்றனர்.

Tags : Karim ,RSS area ,
× RELATED வத்தலக்குண்டு ஜி.தும்மலப்பட்டியில்...